Friday 14 November 2014

புறப்பாடு

ஜெயமோகன் தமிழ் இலக்கிய உலகத்தில் மிகவும் முக்கியமான எழுத்தாளர். நாவல் சிறுகதை சமூகவியல் முதலான பல துறைகளில் திறமையுள்ளவர். அப்படிப்பட்டவரது இளம் வாழ்க்கை பற்றிய குறிப்பு புறப்பாடு.

அவரது வீட்டில் வைத்து அந்த நூல் எனக்குத் தரப்பட்டது. ஏற்கனவே ஒரு சில அத்தியாயங்களை அவரது இணையத்தில் வாசித்து இருந்தேன். சில மாதங்களுக்கு முன்பு முழுதாக வாசித்து விட்டு மீண்டும ஒருமுறை வாசிக்க வேண்டும் என்ற எணணத்துடன் கட்டிலருகே வைத்தேன். பல மாதங்கள் கடந்த பின் மீண்டும் இரண்டாம் முறையாக வாசித்தேன்.

அமெரிக்க செவ்விலக்கியத்தின் முதல்நூலாக வைக்கப்படுவது பெஞ்ஞமின் பிராங்கிளினது சுயசரிதை. பிரித்தானிய கொலனியாக அமெரிக்கா இருந்தபோது அங்கு பிறந்து அமெரிக்காவிற்கான பிரான்ஸின் தூதுவராகவும் விஞ்ஞானியாகவும் படைப்பாளியாகவும் பிரசித்திபெற்ற இவரது சுயசரிதை அமெரிக்காவின் ஆரம்பகாலத்து கருத்தியல் கட்டுமானத்தை உருவாக்கியது.

அமெரிக்க குடியரசின் முதல் ஜனாதிபதியான ஜோர்ஜ் வாசிங்டனுக்கு அடுத்தபடியாக கருதப்படும் இவரது உருவப்படம்தான் இன்னமும் நூறு டொலரில் உள்ளது.

இந்தியாவில் காந்தியின் சுயசரிதையான சந்தியசோதனை முக்கியமான நூலாக கருதப்பட்டாலும் அதை ஒரு இலக்கியமாக இந்தியாவில் பேசப்படுவது கிடையாது. அதேபோல் நெல்சன் மண்டேலாவின் நீண்டபயணமும் முக்கிய நூலாக கருதப்படுகிறது. தமிழ் சமூகத்தில் தங்கள் அனுபவங்களை மட்டும் பலர் எழுதி இருக்கிறார்கள். சுயசரிதை என்று எழுதியது எஸ். பொன்னுத்துரை போன்ற ஒருசிலர் மட்டுமே.

எந்த ஒரு தமிழ் எழுத்தாளரையும் பார்க்க ஆற்றங்கரையில் சலவை செய்யும் உடையைப்போல் மிகவும் கடினமாக மற்றவர்களால் இணையத்தில் சலவை செய்யப்படுபவர் ஜெயமோகன்.

அமெரிக்க எழுத்தாளரான எட்கார் அலன்போ போன்று மதுவுக்கு அடிமையான இலக்கியவாதியாகவோ அல்லது ருஷ்ஷிய கவிஞரான புஸ்கின்போன்று பெண்களை மயக்குபவராக ஜெயமோகன் இருந்தால் தனிமனித தாக்குதல்களை ஏற்றுக்கொள்ளலாம்.

இந்திய சமூகத்தில் காலம் காலமாக பேசப்படும் தனிமனித விழுமியத்திற்கு மனதால்கூட தவறாமல் வாழும் எழுத்தாளர் ஜெயமோகன் என நான் நினைக்கிறேன். இலக்கியவாதியின் இலக்கியத்தை வைத்து விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ளலாம். தனிமனித விழுமியத்தில் குறைகண்டு சொல்வதை புரிந்துகொள்ளலாம்.

எனது அசோகனின் வைத்தியசாலை நாவலுக்கு ஜெயமோகன் முன்னுரை எழுதியதால் ஒருசிலர் அந்த நூலை தொடுவதற்கும் தயங்கினர்.

இது ஏன்?

ஜெயமோகன் ஒரு மலையாளி என்ற இனத்துவேசமா?

தமிழில் இடைவிடாது அவர் எழுதிக்கொண்டிருப்பதனால் உருவான காழ்ப்புணர்வா?

தமிழில் விமர்சனப்படுத்தக் கூடாது என்று சொல்லப்படும் திராவிடக்கொள்கை மற்றும் அது சார்ந்த போலித்தனமான கட்டுமானங்களை அவர் விமர்சிப்பதனாலா?

என்னைப் பொறுத்தவரையில் அவர் மீது மேற்கொள்ளப்பட்ட முதல் இரண்டு செயல்களையும் தமிழுக்கு கிடைத்த கொடையாகவே பார்க்கிறேன்.

இரண்டாவதாக திராவிடக்கட்;சிகளை அவரைவிட கடுமையாக விமர்சித்த சோ ராமசாமி மற்றும் ஜெயகாந்தன் ஆகியோர் இவ்வாறு தாக்கப்படவில்லையே…?

இலக்கியரீதியில் இலக்கிய கட்டுமானங்களை வைத்து அவரது படைப்பை விமர்சித்தால் அது நியாயமானது. ஆனால் தனிமனிதரை எப்படி அவருடன் நெருங்கிப் பழகாதவர்கள் விமர்சிக்கமுடியும்? என்பதுடன் இதற்கு அடிப்படையில் என்ன காரணம் என்றும் என்னை ஆச்சரியப்படவைத்தது.

அவுஸ்திரேலியாவுக்கு அவர் வந்தபோதும் பலர் இதையே செய்தார்கள்.

விடைதெரியாத வினாக்கள் இவை.

எனினும் அவர் அவுஸ்திரேலியாவில் கண்ட காட்சிகளை பெற்ற அனுபவங்களை தமிழில் வெகு சிறப்பாக புல்வெளிதேசம் என்ற நூலில் பதிவுசெய்திருக்கிறார்.

அவுஸ்திரேலியாவைப்பற்றிய இந்த நூல் தமிழுக்கு சிறந்த கொடை.

இப்படிப்பட்ட ஜெயமோகனிடம் என்னை நெருங்க வைத்தது அவரது இரண்டு கட்டுரைகள்தான். அதற்கு முன்பாக அவரது கதைகளையோ நாவல்களையோ நான் வாசித்ததும் இல்லை. ஏன் கேள்விப்பட்டதும் இல்லை. திண்ணை இணையத்தில் பிரசுரிக்கப்பட்ட அவரது இரண்டு கட்டுரைகள்; முக்கியமானது.

அதில் ஒன்று இஸ்லாமிய மக்கள் தமிழுக்கு செய்த சேவை பற்றியது. மற்றது பாசிசம் பற்றிய கட்டுரை.

முதல்கட்டுரை வந்தகாலத்தில் வடக்கில் இஸ்லாமியரை விடுதலைப்புலிகள் வெளியேற்றிய காலம். அப்பொழுது இஸ்லாமியத் தமிழர்களின் தமிழ் சேவையை எனக்கு இவரது கட்டுரை புரியவைத்தது.

அதேபோல் இரண்டாவது கட்டுரை எமது இலங்கை மண்ணில் புலிப்பாசிசத்தின் கரியநிழல் படர்ந்து இருந்த காலத்தில் வெளியானது.

இரண்டு கட்டுரைகளையும் நான் முன்னர் நடத்திவந்த உதயம் இதழில் பிரசுரிக்க அனுமதி கேட்பதற்காக அவருடன் தொடர்பு கொண்டபின்னர் அவருடனான எனது தொடர்பு 15 வருடங்களுக்கும் மேலாக நீடிக்கிறது. இந்தத் தொடர்புகள் எனக்கு இலக்கியத்திலும் சமூகவாழ்விலும் துளியளவும் வணிகம் செய்யாத ஒருவரை இனம்காட்டியது.

அவரது இணயத்தளமானது என்போன்ற இலக்கியத்தை பள்ளியில் படிக்காதவர்களுக்கு ஒரு பல்கலைக்கழகம் போன்றது. இவ்வருட ஆரம்பத்தில் அவரது வீட்டுக்குச் சென்றபோது அவர் மகாபாரதத்தை எழுதிக் கொண்டிருந்தார். அவரது நேரத்தை நான் எடுத்துக் கொள்ளாமல் வெளியேற விரும்பினேன். அத்துடன் எழுதுவதோடு உடற்பயிற்சியையும் மேற்கொள்ளுங்கள் என அவருக்கு ஆலோசனை கூறினேன்

இலக்கியவாதி வெறும்;; கதைசொல்லியாக மட்டும் இராது சமூகத்தில் ஒரு அங்கமாகவும் இருந்து அந்த சமூகத்தில் காணப்படும் குறைகளை இடித்துரைக்கும் போது அவனுக்கு எதிரிகள் உருவாகுவார்கள்

அப்படிப்பட்டவரை அழித்துவிட்டுத்தான் வேறு விடயங்கள் பார்ப்பார்கள். இது எல்லா சமூகத்திலும் நடக்கிறது. இப்படியான எதிர்ப்புகள் ஜெயமோகனுக்கு மேலும் உத்வேகத்தை அதிகரிக்கும் என நினைக்கிறேன்.

ஜெயமோகனது புறப்பாடு என்ற அவரது இளமைகாலத்தைப் பற்றிய நூலை படிக்கும்போது ஒரு நாவலாக அது விரிந்து சென்றதுதான் எனது வாசிப்பு அனுபவம்.

இளவயதை எழுதுபவர்கள் எல்லோரும் நேர்மையாக எழுதுவது கிடையாது. புறப்பாடு நூலில்; காணப்படும் ஜெயமோகனுக்கும் நான் பார்த்த ஜெயமோகனுக்கும் துளியும் வித்தியாசம் தெரியவில்லை.

சிறுவயதில் தந்தையுடன் கோபித்துக்கொண்டு சென்ற கதை முதலாவதாகவும் – பின்பு தலித் நண்பனை பாதுகாப்பதற்காக ஊரைவிட்டு ஓடி வடஇந்தியா செல்வதும் அங்கு அவர் கண்டவிடயங்களும் யதார்த்தமாக விபரிக்கப்படுகிறது.

முதல் வாசிப்பில் என்னைக்கவர்ந்த பகுதிகள் சென்னையில் அவர் வசித்த காலங்கள். நானும் எண்பதுகளில் சென்னையில் பார்த்த காட்சிகள் மனதில் வந்து போனது. நான் பார்த்த இடங்கள் தென் மற்றும் மத்திய சென்னை ஓரளவு மத்தியதரவர்க்கத்தினர் வசிக்கும் பிரதேசம்.

ஆங்காங்கு குடிசைகள சென்னையில் பார்த்தாலும் அதற்கு மாறுபட்டது ஜெயமோகனது விவரிப்பு. சென்னையின் விளிம்பு நிலை மக்களையும் அவர்களது வாழ்க்கை முறையையும் மனக்கண்ணில் கொண்டுவந்தது.

இரண்டாவது தடவையாக இந்நூலை வாசித்தபோது வட இந்தியாவில் அவரது அனுபவங்கள் பம்பாயி;ல் சாந்தாராம் என்ற நூலில் அவுஸ்திரேலியரது அனுபவத்தை ஒத்திருந்தன. வட இந்திய நகரங்களான காசி ரிஷிகேசம் என்பன பற்றிய விவரிப்பு மிகவும் சுவையாக அதேநேரத்தில் வாசிப்பவரை அந்த வாழ்வோடு அழைத்துச்செல்வதாக அமைந்துள்ளது.

ஜெயமோகன் தனது தலித் நண்பனின் ஊருக்குச் சென்றபோது அவனது பெற்றோர்கள் ஆரம்பத்தில் ஜெயமோகனை வெறுப்புடன் ;எதிர்கொள்வது கிராமங்களில் சாதிப்பிரிவுகள் எப்படி மனிதர்களின் அடிப்படையான குணங்களாக மாறி பாதரசகழிவு சேரும் கடலில் வாழும் மீனைப்போல் நஞ்சு கலந்த கலாச்சாரமாகிவிடுகிறது என்பதை உணர்த்துகிறது.

அந்தக் கலாச்சார கூறுகள் தலைமுறையாக கடத்தப்பட்டு மனித மனங்களில் ஊறி விஷமாகியிருப்பதும் அதுவே மனச்சாட்சி என்ற படிமமாக வெளிவருகிறது.

ஒவ்வொரு சாதியினரதும் மனச்சாட்சி வேறுபடுகிறது. தேவரின் மனச்சாட்சி பிள்ளைமாரின் மனச்சாட்சியல் இருந்து வேறுபடுகிறது. ஆதேபோல் இந்துவின் மனச்சாட்சியும் ஓரு இஸ்லாமியனில் இருந்து வேறுபடுகிறது. மனிதர்கள் மனச்சாட்சி அந்த சமூகத்தில் அவர்கள் வாழ உதவுகிறது என்பது மட்டுமே உண்மை. ஆனால் தோழமை காதல் என்பது ஏற்படும்போது ஏற்படும் மன உணர்வு காலம்காலமாக இருந்த மனச்சாட்சியை வெல்லுகிறது.

காதல் தோழமை அடிப்படையான உணர்வுகள். அவை மதம் சாதி என்பவற்றிற்கு முன்னானவை .. இதற்கு எனது வாழ்க்கையிலும் எடுத்துகாட்டுகள் இருக்கின்றன. இலங்கையில் சிங்களவர்கள் தமிழரை தாக்கிய காலத்தில் என்னை பாதுகாத்த எனது சிங்கள நண்பர்கள்; உன்னை மாதிரி தமிழர்கள் எல்லோரும் இருந்தால் பிரச்சினை இல்லை என்றார்கள். நான் அதற்கு என்னைமட்டும் நீங்கள் தெரிந்து கொண்டீர்கள். மற்றவர்களையும் நீங்கள் அவ்வாறு தெரிந்து கொள்ளும்போதுதான் அவர்களும் என்னைப்போன்றவர்களே என்பது புரியும் என்றேன். இதை எனது முதல் நாவலான வண்ணாத்திக்குளத்தில் பதிவு செய்துள்ளேன்.

நட்பு என்பது சாதிமதம் போன்ற சகல சமூக வேறுபாடுகளையும் ஊடுருவும் என்பதை புறப்பாடு நூலில் தலித் நண்பனுடன் ஊரைத்தாண்டி ஓடும்போது புரிந்து கொள்ளலாம். அந்தப்பகுதிகள் யதார்த்த சினிமாவாக எனது கண்ணில் விரிந்தது.

காசி மற்றும் ரிஷிகேசம் போன்றவற்றில் நடப்பதை படிக்கும்போது பின்வரும் சிந்தனை ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.

‘சமூகத்தில் ஆன்மீக நம்பிக்கையில் மதநம்பிக்கை உருவானது. ஆனால் அது பலமாக ஊடுருவும்போது பெரிய உலகம் முழுவதும் பரந்த கோப்பரேட் கம்பனிபோல் வளர்ந்து விடுகிறது. பலருக்கு இது கட்டுப்பாடற்ற வர்த்தக மையமாகிறது. ஏராளமான பணம் புரளும் பாரிய நியூயோர்க் பங்குச் சந்தைபோன்றது. இந்தியாவில் இந்துமதம் என்பது அமெரிக்காவின் முதலாளித்துவம் போன்றது. இதை நம்பி பலகோடி மக்களின் வயிறுகள்; காத்திருக்கின்றன. இந்தப் பொருளாதார சந்தை மட்டுமே ஓர் இரவில் ஏதாவது நடந்து மறைந்தால் பல கோடிக்கணக்கில் மனிதர்கள் வருமானமின்றி தவிக்கவேண்டும்.’

சென்னை பதிப்பாளர்கள் வேலை செய்யும் இடத்து அனுபவங்கள் தமிழ்நாட்டில் துப்பறியும் சமய சோதிட மற்றும் காம சம்பந்தமான புத்தகங்கள் வெளிவருவதன் சூட்சுமம் பற்றிய எனது அறிவை தெளிவாகியது.

மேற்கத்தைய நாடுகளில் சுயசரிதை எனும்போது நேர்மையாக எல்லாவற்றையும் நேரடியான மொழியில் எழுதுவார்கள். அதேநேரத்தில் எண்ணங்கள் (memoirs)என்றால் அதில் தெரிந்து எடுத்து வெளியே சொல்ல வேண்டியது மட்டும் இருக்கும். அங்கு தனிப்பட்ட விடயங்கள் மறைக்கப்பட்டாலும் எழுதியவற்றில் எதுவித கற்பனையும் இராது என எண்ணுவோம்.

புறப்பாடு என்ற நூல் ஜெயமோகன் என்ற மிகமுக்கியம் வாய்ந்த தமிழ் இலக்கியகர்த்தா ஒருவரின் இளம்வாழ்க்கையை அறிந்து கொள்ள ஒருவர் படிக்கும்போது புனைவுகள் கலந்தது என கருதும்பொழுது பாலில் தண்ணீர் கலந்தது என்ற சிந்தனையும் வருவது தவிர்க்கமுடியாதது. சம்பவங்களுக்கு புனைவு மொழியை அவர் பயன்படுத்தியிருப்பதனால் புனைவு கலந்தது என எழுதியிருக்கிறர் என நினைக்கிறேன்.

தமிழ் இலக்கியத்தில் கவிதை சிறுகதை நாவல் என்பவற்றுக்கு அப்பால் சுயசரிதை பயண இலக்கியங்கள் மிகவும் குறைவானவை.

நன்றி நடேசன்.

இணையத்தில் ஆர்டர் செய்ய: www.udumalai.com
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

No comments:

Post a Comment