Friday 14 November 2014

லிங்கூ!


சமீபத்தில் கவிதை புத்தகங்களை வாசிப்பதை தவிர்த்து வருகிறேன். விதி விளக்காக ஹைக்கூ கவிதைகளை மட்டும் வாசிக்கிறேன். மூன்று வரியில் கொடுக்கும் தாக்கம் அதிகமாக இருப்பதால் ஹைக்கூ கவிதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். ஹைக்கூ என்ற வார்த்தையை மாற்றி புதிய வார்த்தையாக ‘லிங்கூ’ என்று லிங்குசாமி பெயிரிட்டதால் என்னை புத்தகம் வாசிக்க வைத்தது.

பெரும்பாலான கவிதைகள் காதல் கவிதைகள். ஆர்வக் கோளாறுகள் முதல் கவிதை நூலாக காதல் கவிதைகளை படம் போட்டு வெளியிட்டு சக்கைப் போடு போட்டது ஒரு காலம். இப்போது, எல்லோரும் படமும், காதல் கவிதகளும் கொண்டு வருவதால் இந்த நூல் அதில் இருந்து வேறுபடவில்லை. படத்திற்கு மாறாக புரியாத ஒவியத்தை லிங்குசாமி வரைந்திருக்கிறார். மற்றப்படி முதல் கவிதை நூல் சராசரி கவிஞனிடம் இருந்து எப்படி படைப்பு வருமோ அப்படி தான் இயக்குனர் லிங்குசாமியிடம் இருந்து வந்திருக்கிறது.
இந்த நூலில் இடம் பெற்று இருக்கும் காதல் கவிதைகளில் மிகவும் ரசித்த கவிதை இது மட்டும் தான்.

சுஜாதா
கவிதா பத்மா உஷா
அப்புறம் கீதா
இவை எல்லாம்
வெறும் பெயர்கள் அல்ல.

சமூக கவிதைகள் ஹைக்கூ இலக்கணத்தில் எழுதவில்லை என்றாலும், சிறப்பாக எழுதியிருக்கிறார். குறிப்பாக ஒரு சில கவிதைகள்.

இஸ்திரி போடும் தொழிலாளியின்
வயிற்றில் சுருக்கம்

பூச்சி மருந்தில் பூச்சி
உயிரோடு

அசோகர் இத்தனை மரங்களை நட்டார்
அதில் ஒன்று கூட போதி மரமில்லையா

என்னிடம் கேட்காமல் கடந்து செல்கிறான்
பிச்சைக்காரன்.

வயிறு முட்ட சாப்பிட்டிருக்க வேண்டும்
ஆப்பிள் விழுந்த கணத்தில்
நியூட்டன்

லிங்கு சார், படத்திற்கு ‘சுபம்’ கார்ட் போட்ட பிறகு ஆடியன்ஸ் தியேட்டரில் இருக்க மாட்டார்கள் என்பது உங்களுக்கு தெரியும். அப்படி இருக்கும் புத்தகம் முடிந்த பிறகு, பத்தி பேர்கள் அறிமுக உரையை, இருபது பக்கங்கள் மேல் இடம் பெற்று இருக்கிறது. இதை விகடன் பிரசுரம் சரிப்பார்த்திருக்க வேண்டும். பாராட்டிய பிரபலங்கள் திரும்ப திரும்ப நான்கைந்து கவிதைகளே சொல்வதால் எல்லா கவிதைகளும் பிரபலங்களுக்கு கொடுக்கப்பட்டதா என்ற சந்தேகம் வருகிறது.

ஒரு அறிமுக எழுத்தாளருக்கு இருக்கும் ஆர்வம் தான் இயக்குநர் லிங்குசாமியிடம் தெரிகிறது. வெற்றிப்பட இயக்குநருக்கு இருக்க வேண்டிய முதிர்ச்சி அவர் எழுதிய புத்தகத்தில் தெரியவில்லை.
- குகன்

No comments:

Post a Comment