Tuesday 25 November 2014

தூயோன் - கோபிகிருஷ்ணன்


மனநிலைகளை ஈடுகட்டப் பொருளால் என்னமோ முடியப்போவதில்லை. சந்தோஷத்துக்கு ஐம்பது ரூபாயும், எரிச்சலுக்கு ஐம்பத்து ஐந்து ரூபாயும் என்று கணக்கு வைத்துக்கொண்டால் உணர்வுகளுக்கு மதிப்பே அற்றுப்போய்விடும் //

என் தன்மைக்கான காரணங்களைத் தேடி அலைவது கூடுதல் அநீதி. எதையும் நியாயப்படுத்திக்கொள்ள விழைவதே விஷயத்தில் அநியாயம் உறைந்திருக்கிறது என்றுதானே அர்த்தம். இயற்கையிலேயே நான் அயோக்கியனாக இருந்தால், அப்படியே இருந்துவிட்டுப்போகிறேனே.

இப்படி முதல்கதையான தூயோனில் எடுத்த வாசிப்பு ஓட்டம் விட்டுவிட்டு ஒரு நான்கு மணி நேரத்துக்குள் கடைசி கதையான எதிர் - உளவியலுக்கு கொண்டு வந்து நிறுத்தியது.

கதையை எங்கும் தேடாமல், வார்த்தைகளுக்கும் மெனக்கெடாமல் இயல்பாய் ஒரு நகைச்சுவையை ஓடவிட்டு தன் வாழ்வனுபவத்தையே பெரும்பாலும் சிறுகதைகளாக்கியிருக்கிறார்.

இரண்டாவது கதையான தெய்வீக அர்ப்பணம், எல்லாம் அவன் செயலாக இருப்பதாகக்கொள்ளப்படும் போது ஓர் உயிரிழப்பும் கூட வாழ்க்கைமுறையை மாற்றிவிடக்கூடிய வலிமையை இழந்துதான் விடுகிறது // என்பதாய் முடியும். படித்தபின் ஒரு பெருமூச்சை மட்டுமே விடமுடிந்தது.

வயிறு என்ற சிறுகதையில், யதார்த்தத்தை உண்மையிலேயே யாருமே கண்டதில்லை.தத்தம் ஆளுமைக்குத் தகுந்தாற்போல் யதார்த்தத்தின் சுய விளக்கங்களையே காண்கின்றனர். என்று சொல்லியிருப்பார்.

புயல் என்ற சிறுகதையில், புயல் மையம் கொண்ட நாளொன்றில் கணவன் வீட்டிற்கு தாமதமாக வருவான், உள் நுழைந்தவுடன் வேலைக்குச் சென்று வந்த மனைவி ஏன் இப்படி தினமும் லேட்டா வர்றீங்க என்று எரிந்து விழுவாள். இப்படி எரிந்து விழுவதற்கான காரணத்தை அவளிடம் கேட்டறிந்த போது அவள் அன்று முழுவதும் தன் வேலை செய்யுமிடத்தில், வேலை முடித்து குழந்தையை கிரச்சிலிருந்து வீட்டுக்கு அழைத்து வரும் வழியில், வீட்டிற்கு வந்தபின் ஏற்கனவே அவ்வீட்டில் குடியிருந்துவிட்டுப்போன ஒரு ஆடவன், தெருவில் இருந்த சில காலிப்பயல்கள் என இவர்கள் அனைவரும் மூலமாக தனக்கு நேர்ந்து சிற்சில பாலியல் தொந்தரவுகளை சொல்லுவாள்.

மனைவி சொல்ல சொல்ல அனைத்தையும் கேட்ட கணவன் அவளை நோக்கி, சமூகம் இன்னிக்கி உன்கிட்ட அதோட விஸ்வரூபத்தைக்காட்டியிருக்கு. அவ்வளவுதான் தூங்கு. எல்லாம் சரியாப்போகும் என்பான். அதற்கு மனைவி அழுகையினூடே உலகத்தைத் தெரிஞ்சுக்கனும்னீங்க, புரிஞ்சிக்கிட்ட வரைக்கும் சகிக்கலை என்பாள்.

முடிவிலாத யோசனைகளூடே கணவன் கடைசியில் தன் நடத்தையையும் கொஞ்சம் யோசித்து, தான் எந்தப்பாவமும் செய்யாத புண்ணியாத்மா அல்ல, ஆனாலும் பெண்களிடத்து அசிங்கமாகவோ, விகாரமாகவோ நடந்து கொண்டவனுமல்லன், பெற்றவர்கள் பண்ணிய பாவம் பிள்ளைகளைச் சேரும் என்று சொல்லக்கேட்டிருக்கிறேன், ஆனாலும் கணவன் செய்த பாவம் மனைவி தலைமேல் விடியும் என்று எந்தப்பெரியாரும் சொன்னதாக கேள்வி இல்லையே என்பதாய் நினைத்து வெறுப்பின் உச்சத்தில் சாக்கடையில் உழலும் பன்றிகள் என்று சொல்லி தன் இயலாமையை தீர்த்துக்கொள்வான்.

உடைமை என்ற சிறுகதையில், வீட்டு உரிமையாள கிழவியின் அராஜகத்தை தட்டிக்கேட்க இயலாத ஒண்டுக்குடித்தனவாதியின் இயலாமைகளே பிரதிபலிப்பதாய் ஒரு இடத்தில் // சூழல் ஒவ்வாததுதான். ஆனால் செத்தா போய்விடமுடிகிறது ? // என்ற ஒரு ஒற்றை வாக்கியம் வரும். படிக்கும் போது நிறைய இடங்கள் புன்னகைக்க வைத்தன, அதில் பிரதான இடம் இது.

இதே கதையில் தன் குழந்தையைப் பற்றி சொல்லும் ஒரு இடத்தில் // தகப்பன் என்ற ஸ்நானம் வந்துவிட்டாலே என் “செய்” களை, என் “செய்யாதே”க்களை அவளுள் புகுத்துவேன். என் அளவுகோல்களை அவளுக்குக் கற்பிப்பேன், என் கொள்கைகளை அவளுக்குப் போதிப்பேன். வன்முறைதானே இவையெல்லாம் ? (இது தகப்பனுக்கு மட்டுமான வாசகமல்ல, இப்போதைய சூழலில் பெற்றோருக்கான வாசகம்)

இந்தக் கதையின் இறுதியில் கலீல் ஜிப்ரான் வரிகளை தான் நினைப்பதாகவும், ஆனால் தன் மனைவிக்கு என்ன சமாதானம் சொல்வது என்று தெரியாமலிருப்பதாகவும் பின்வரும் வரிகளை நினைவூட்டுவார்.

...”உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்ல, அவைகள் உங்கள் மூலமாக உலகில் ஜனிக்கின்றன. ஆனால் உங்களிடமிருந்து அல்ல. அவைகள் உங்களுடனிருந்தாலும் உங்களுக்குச் சொந்தமானவைகள் அல்ல...”

இப்படியாய் வழி நெடுக நிறைய எள்ளல்களையும், யோசிக்கத்தூண்டும் வரிகளை உட்புகுத்தி வைத்துக்கொண்டு சடங்கு, இரு உலகங்கள், விழிப்புணர்வு, அம்மன் விளையாட்டு,..... என சில கதைகள் செல்கின்றன.

இதுவும் சாத்தியம் தான் என்ற ஒரு சிறுகதை, மிக அழகாக நேர்த்தியாக மிக அழகான ஒரு பெண்ணுக்கும், ஒரு ஆடவனுக்கும் பணியிடத்து தோன்றி வளரும் நட்புணர்வைச் சொல்கிறது.

ஓர் உறவுக்குப் பெயர் சூட்டிப் பாதுகாப்பை தேடிக்கொள்வதும் வரைமுறை வகுப்பதும் எரிச்சலூட்டும் பயந்தாங்கொள்ளித்தனம். தோழமைக்கு ஒரு பழிப்பு; ஒரு கொச்சைப்படுத்துதல், என்னைப்பொறுத்த மட்டில் நிர்ப்பந்திக்கப்படாத அனைத்து உறவுகளும் புனிதமானவையே என்று தன் தோழியுடனான கடைசி சந்திப்பின் போது கதாபாத்திரம் சொல்வதாய் வரும்.

இந்தத் தொகுப்பில் இருக்கும் கடவுளின் கடந்த காலம் என்ற சிறுகதை, அழியாச்சுடர்கள் என்ற இந்த வலைப்பூவில் இதோ இங்கேயிருக்கிறது.

கடைசி கதையான எதிர்-உளவியல் என்ற சிறுகதையில் மனநோயாளி என்று ஆலோசனைக்காக வரும் ஒருவருக்கும், ஆலோசகரான ஒருவருக்குமான உரையாடலே கதை. சுவாரசியமான உரையாடலில் மிக சுவாரசியமானதாக தோன்றுவது //தங்களைத் தாங்களே விமரிசித்துக்கொள்ளும் பழக்கம் உங்களிடமுள்ளதா? அப்படியிருந்திருந்தால் என்னை நாட வேண்டிய அவசியம் உங்களுக்கு ஏற்பட்டிருக்காது என்றே தோன்றுகிறது.//
புத்தகத்தின் பெயர்: தூயோன் பதிப்பகம்: தமிழினி விலை: ரூ. 40/-

நன்றீ
அமிர்தவர்ஷினி அம்மா அவர்களுக்கு

இணையத்தில் வாங்க: http://www.udumalai.com/jeyamohan-sirukathaikal.htm

தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

No comments:

Post a Comment